பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள மணிக்கூடுகள் நீண்ட காலமாக இயங்காமல் இருக்கின்றது. இது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரையும் அந்த மணிக்கூட்டினை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாநகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராசா கடமையாற்றிய போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரைக்கமைவாக யாழ்.மாநகர சபையால் 34 இலட்சம் ரூபா செலவில் மணிக்கூட்டுக் கோபுரம் மறுசீரமைக்கப்பட்டு (16-05-2013) அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் 5 மாதங்களாக இந்த மணிக்கூடுகள் இயங்காது பழுதடைந்த நிலையில் உள்ளது. யாழ்ப்பாணம் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாண மணிக்கூடு கோபுரம் காணப்படுவதுடன் தற்போது பறவைகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது.
இந்த மணிக்கூட்டினை திருத்தி மீள இயங்க வைக்க வேண்டியது யாழ்.மாநகர சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும் என தெரிவிக்கப்படுகிறது.