இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியலை மேலும் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 03ம் திகதி மாளிகாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது அப்துல் ராசிக் , பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோரின் விமர்சனங்களுக்கு கடுமையான தொனியில் பதிலளித்திருந்தார்.
அவரது கருத்து இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்த வழி செய்யும் என்று அசாத் சாலி ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தார். அத்துடன் அமைச்சர் ரிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி என். எம். சஹீத் ஊடாக நீதிமன்றத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த15ம் திகதி கைது செய்யப்பட்ட ராசிக், 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அசாத் சாலி, சட்டத்தரணி சஹீத் தரப்பினர் அப்துல் ராசிக்குக்கு எதிரான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
ஏற்கனவே நீதிமன்றில் பிரிதொரு வழக்கில் எந்த மதங்களுக்கும் நிந்தனை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதனால் அவரை தற்போதைய வழக்கிலிருந்து பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அப்துல் ராசிக்கின் விளக்கமறியலை எதிர்வரும் 09ம் திகதி வரை நீடித்து நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.