எம்.எஸ்.எம்.ஸாகிர்-
யாழ்ப்பாணம் பரச்சேரி கிராமத்தில் முஸ்லிம்கள் குடியேறுவதை அங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் தடுத்து வருவதை ஆட்சேபிக்கிறோம். அந்த மக்கள் மீள்குடியேற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் முற்போக்கு முன்னணிகளின் செயலதிபருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
நேற்று பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் நடைபெற்ற இடதுசாரி முன்னணிகளினுடைய கூட்டு ஊடக சந்திப்பின் போது பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களுடைய ஆதரவோடு சமஷ்டிமுறை ஆட்சியை நிறுவுவோம் என சூழுரைக்கும் முதலமைச்சர் விக்னேஷ்வரன், முஸ்லிம்களுக்கு அளிக்கும் இடம் இதுவா என்றும் முஸ்லிம்களுக்கு வழங்கும் உரிமை இதுவா என்றும் முஸ்லிம் மக்கள் நினைத்துப் பார்க்க தலைப்பட்டுள்ளனர்.
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட யாழ். முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் விரட்டியடித்தனர். அப்படி விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்லக்கூடிய நிலையில் தங்களுடைய மனவளத்தைக் கொண்டுள்ளனர். அங்கே போகும் பொழுது பரச்சேரி கிராமத்தில் அவர்களை குடிமர்வுவதை அரச உத்தியோகத்தர்கள் முதலமைச்சருடைய மாகாண சபைகள் மூலம் எதிர்த்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைக் கூட தடுத்திருக்கிறார்கள். அதையும் மீறி முஸ்லிம்கள் தங்களுடைய ஆவேசத்தை பெரியதொரு ஆர்ப்பாட்டத்தின் மூலம் வெளியிட்டு இருக்கின்றார்கள். எனவே இப்படியான விடயங்கள் அங்கு முஸ்லிம்களுக்கு நடப்பதிலிருந்து, எதிர்காலத்தில் இந்த வட கிழக்கு இணைந்தால், அல்லது யாழ். முதலமைச்சரை நம்பி இருந்தால் என்ன விளைவு ஏற்படும் என்று முஸ்லிம்களுக்குத் தெரியவரும் - என்றும் தெரிவித்தார்.