ஏழைய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - அமீர் அலி

நாச்சியாதீவு பர்வீன்-
ந்தப் பிரதேசத்தில் அடிப்படை வசதிகளற்ற மக்கள் வாழ்வது பெரும் கவலை தருகின்ற விடயமாகும். கடந்த முப்பது வருட கால கொடூர யுத்தத்தின் சுவடுகளை இங்கே தரிசிக்க முடிகின்றது. யுத்தத்தில் அகப்பட்ட ஏனைய பிரதேசங்கள் மெல்ல மெல்ல அபிவிருத்தியைக் கண்டு வருகின்றபோதும் இந்தப் பிரதேசமானது இன்னும் இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற அளவில் இல்லாமலிருப்பது துரதிர்ஷ்டமே. இந்தப் பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டும் அந்த அபிவிருத்தியை விரைவில் செயற்படுத்த வேண்டும் என்ற பேரவா எனக்கு இருக்கின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் பால் பதனிடும் நிலையத்தை திறந்துவைத்துவிட்டு வாகரை கட்டுமுறிவு பாடசாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அபிவிருத்தி என்பது வானத்திலிருந்து வருபவை அல்ல. அது உங்களின் ஒற்றுமையினாலும் நீங்கள் தெரிவுசெய்கின்ற அரசியல் தலைமையினாலும் உருவாகுவதாகும். அநேகமான முஸ்லிம் கிராமங்களை பாருங்கள். ஓட்டமாவடி, வாழைச்சேனை, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்கள் தமது அரசியல் தலைமையிடம் விசுவாசமாக நடந்துகொண்டு அவர்கள் மூலமாக தமது பிரதேசத்தை வெகுவிரைவில் அபிவிருத்தி செய்கின்றார்கள். அநேகமான தமிழ் பிரதேசங்களில் இந்த நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பின் ஒரு எல்லைக் கிராமமான கட்டுமுறிவு கிராமமானது பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக ஏங்கிக் கிடக்கின்றது. இங்குள்ள பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவேண்டியவை. 

இந்தப் பாடசாலையின் பல வளப்பற்றாக்குறை நிலவுகின்றதாக அதிபர் அவர்கள் கூறினார்கள். இங்குள்ள விவசாயிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு தமது பசுக்களை மேய்ச்சலுக்கு விடுவதற்கு மேய்ச்சல்தரை பிரச்சினை இருக்கிறது. சுகாதாரம் முன்னேற்றம் அடையவேண்டிய தேவை இருக்கின்றது. இப்படி ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்துமே இந்தக் கிராமத்திற்கு தேவைப்படுகின்றது. போக்குவரத்து வசதி மிக மந்தநிலையில் இருப்பதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள். ஒட்டுமொத்தமாக இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை என்னால் தரமுடியாவிட்டாலும் கட்டம் கட்டமாக இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதில் நான் உறுதியோடு இருக்கின்றேன்.

நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் இந்த நல்லாட்சி நம்பிக்கை தருகின்ற விதத்தில் செயற்படுகின்றது. காலம் தான் உங்களது பிரச்சினைகளுக்கான மிகச் சிறந்த பதிலை சொல்லும். இங்கு இருக்கின்ற பால் உற்பத்தியாளர்களின் மிகப் பெரும் பிரச்சினையாக இருந்த பால் பதனிடும் நிலையமானது இன்று இங்கே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிருக்கின்ற பால் பண்ணையாளர்கள் பிரதிபலனை அடைய முடியும். கடந்த காலங்களில் இந்தப் பால் பண்ணையாளர்கள் தமது பாலை விற்பனை செய்வதற்கு மிக நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலவரம் தற்போது இந்தப் பால் பதனிடும் நிலையம் மூலமாக தீர்க்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த காலங்களில் பாலினை பதனிடும் நிலையத்திற்குக் கொண்டு செல்லுகின்றபோது தூரம் காரணமாக அந்தப் பால் கெட்டுப் போய்விடுகின்ற நிலவரமும் அதன் மூலம் அந்தப் பண்ணையாளர்கள் நஷ்டமடையக்கூடிய நிலவரமும் காணப்பட்டது. இதற்கான தீர்வாக இந்தப் பால் பதனிடும் நிலையம் அமையும் என்கின்ற உச்சபட்ச நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது.
இதன்போது பால் உற்பத்தியாளர்கள் சிலருக்கான ஊக்குவிப்பு நிதியுதவி பிரதியமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் திரு கே . கணகராஜா, பாடசாலை அதிபர் திரு பஞ்சாசரம் , அமைச்சரின் இணைப்பாளர்களான திரு கதிர்காம தம்பி , மோகன், குரூஸ் பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம்.ரிஸ்மின் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -