பாறுக் ஷிஹான்-
யாழ். ஊர்காவற்றுறையிலிருந்து காரைநகர் செல்வதற்கான கடல்வழிப் பாதைக்கான பாலம் அமைக்கும் பணிகளால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இத்திருத்த வேலை காரணமாக பாதுகாப்பற்ற படகு சேவை மூலம் மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
வழமையாக மேற்கொள்ளப்படும் பாதை சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காரணம் பாலம் அமைக்கப்படும் நடவடிக்கை ஏற்கனவே பாதை செலுத்தப்பட்ட வழியில் மேற்கொள்ளப்படுகின்றமையினால் ஆகும்.
இதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பற்ற படகு குறித்து அதில் பயணம் செய்யும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தற்போது இப் பால நிர்மாணிப்பு பணி மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் நிதி உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பாலம் 450 மீற்றர் நீளமானதுடன் இதனை அமைப்பதற்கு சுமார் 1500 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த பாலம் அமைக்கப்பட உள்ள நிலையில் மக்கள் இவ்விரு இடங்களிற்கும் பாதுகாப்பற்ற படகு சேவையில் தங்கள் பயணங்களை செய்கின்றனர். எனவே இது குறித்த உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றர். குறித்த பாலம் அமைக்கப்படுவதன் காரணமாக மக்கள் விரைவாகவும் இலகுவாகவும் தமது பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதுவரை காலமும் இரண்டு பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தானது பாதை (படகு வகை) ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது.
இந்நிலையில் தற்போது பாலம் அமைப்பதற்காக கடலின் தரையமைப்பு எவ்வாறுள்ளது என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுளளதுடன் அது நிறைவடைந்ததும் பாலத்திற்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு அவற்றை கட்டு வதற்கான கட்டுமானங்கள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.