அபு அலா -
முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்காக தன் உயிரையே தியாகம் செய்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம் அலி உதுமானின் நினைவு நாளான ஆகஸ்ட் 01 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியான 'வீட்டுக்கு வீடு மரம்' நடும் திட்டத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் இன்று (25) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மர்ஹூம் அலி உதுமான் கடந்த 1989.08.01 ஆம் திகதி அவரது அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து தழிழ் ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இவரின் சேவைக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு தமிழ் ஆயுதக் குழுவினர்களினால் ஏற்படும் சமூகப் பிரச்சினை, ஆள்கடத்தல், வர்த்தக நிலையங்களை கொள்ளையடித்தல் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து முன்நின்று செயற்பட்டவராவார். இவ்விடயங்களில் தலைபோடக்கூடாது என்று பல எச்சரிக்கைகளை தழிழ் ஆயுதக் குழுவினர் விடுத்தும் விடுத்திருந்தனர்.
இதனை பொறுப்படுத்தாத அவர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பல பிரதேசங்களில் 1988 தொடக்கம் 1989 ஆண்டுவரையில் இடம்பெற்ற ஆள்கடத்தல் விடயங்களிலும் தலையிட்டு வந்தார்.
இதேவேளை வட - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக இருந்துவந்த 3 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் இவர் மட்டும்தான் முன்நின்று எந்த தழிழ் ஆயுதக் குழுவினர்களுக்கும் பயப்படாமலும், அவர்களின் எச்சரிக்கைகளை பொறுட்படுத்தாமலும் மிக துணிச்சலாக செயற்பட்டும் வந்தார். இதன் காரணமாகவே தழிழ் ஆயுதக் குழுவினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் சிறந்ததொரு ஆங்கில ஆசிரியராகவும், ஒழுக்கவியல் விடயங்களுக்கு பொறுப்பானவராகவும் செயற்பட்டவராவார். இவரின் மகனும் விஞ்ஞானத்துறையில் 6 தங்கப் பதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியாக பல சாதனைகளைப் படைத்து முஸ்லிம் சமூகத்துக்கு பெருமை சேர்த்துக்கொடுத்தவராவார் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.