கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல உணவு விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தன்னை ஊக்குவித்ததாகக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, ஜாகிர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோ மற்றும் ஆடியோக்களை மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில புலனாய்வு பிரிவு காவல்துறையினர் (SID) ஆராய்ந்தனர். மேலும் ஜாகிர் நாயக், தான் எப்போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார். எனினும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, அவரை ஒரு தீவிரவாதி போன்று செய்தி வெளியிட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில புலனாய்வு பிரிவு காவல்துறையினர், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தது.
கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தின் போது, அதன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஜாகிர் நாயக்கிற்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். மேலும் தீவிரவாதத்தின் ஏஜெண்ட்தான் ஜாகிர் நாயக் என்றும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பேசினார்.
நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் :
இதனைக் கண்டித்து, டைம்ஸ் நவ் மற்றும் அதன் தலைமைச் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் 500 கோடி இந்திய ரூபாய் நஷ்ட ஈடு கோரி இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் சார்பில் அவரது வழக்கறிஞர் முபின் ஷோல்ஹர் அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.