பல்கலைக்கழக மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு, எச்.ஐ.வி மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 191பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 6,300 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், உயர்தரம் கற்பதற்கு, சுகாதார பாடத்தில் சித்தியடைவது அவசியமானது என வலியுறுத்தப்படவுள்ளதாகவும், பரவாத மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான பாடத்தை, கல்வியமைச்சுடன் கலந்துரையாடி, பாடமாகக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
'சிலருக்கு, அவர்களுக்குத் தெரியாமலேயே தொற்று ஏற்பட்ட காரணத்தாலும், இன்னும் சிலருக்கு, தொற்று ஏற்பட்டமை தெரிந்த போதிலும், சமூகப் பயம் காரணமாக, அதை வெளிப்படுத்த விரும்பாததன் காரணமாகவும், பதியப்படாத சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன' என, அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.
9 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 71 பேரும், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான, 10 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 7 சிறுவர்களும், 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட 13 சிறுவர்களும், தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
