இலங்கையின் இனங்கள் மற்றும் மத, மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும். எனவே தமிழ், சிங்கள மொழிகள் இரண்டு ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் நடைமுறை ஆக்கப்படும் அதிகாரத்தையும், அதேபோல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் மத்தியிலான சகவாழ்வை உறுதிப்படுத்தும் அதிகாரத்தையும், கொண்டுள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சை, ஒரு முக்கியமான ஒரு அமைச்சாக நாம் கருதுகிறோம்.
இந்த பின்னணியில் உங்கள் அமைச்சின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவின் நல்லெண்ண ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெசாப், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனோ கணேசனுக்கும், அமெரிக்க தூதருக்கும் இடையில் தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கருத்து வெளியிடப்பட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரும், ஜமமு, தமுகூ தலைவருமான மனோ கணேசன் தெரிவித்ததாவது,
சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் எனது அமைச்சு முக்கியமான ஒரு இடத்தை வகிப்பது எனக்கு தெரியும். நான் இந்த அமைச்சு பொறுப்பை ஏற்று தற்போது சுமார் இரண்டரை மாதங்களே ஆகியுள்ளன. தற்போதைய வரவு செலவு திட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் நமது அமைச்சின் புதிய திட்டங்களை நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்க நான் திட்டமிட்டுளேன். கடந்த கால ஆட்சியில் இருந்திராத அரசியல் திடப்பாடு இன்றைய அரசில் இருக்கின்றது. இதன்மூலம் மொழியுரிமையையும், வாழ்வுரிமையும் இந்நாட்டில் படிப்படியாக நான் உறுதிப்படுத்துவேன்.
இதற்கான தயாரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனது அமைச்சின் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி, ஒத்தாசைகளை நான் நாடியுள்ளேன். இதற்கான உறுதிப்பாடுகள் தொடர்ச்சியாக என்னை சந்தித்து வரும் தூதுவர்கள் மற்றும் சர்வதேசிய சமூக பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருகின்றன. எனது அமைச்சின் திட்டங்கள் எவை என்பதுபற்றி இன்னமும் சில மாதங்களில் நாட்டு மக்கள்,குறிப்பாக கடந்த காலங்களில் துன்பங்களை சந்தித்த மக்கள் நடைமுறையில் அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

