எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீ,லசு.க. கொழும்பு மாநகர சபையை வெற்றி வாகை சூட்டிக் கொள்வது திண்ணம் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கிறேண்ட்பாஸ் – கம்கருபுர வீடமைப்புத் திட்ட நுழைவாயிலுக்கு அருகில் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பாதையொன்றை திறந்து வைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.மன்ஸிலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட இப் பாதையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தும் போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த காலத்தில் சிறுபான்மை இன மக்கள் ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து தூர விலகிச் சென்றனர். இது அப்போதைய அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வின் தாக்கம் தான் என்று கூற வேண்டும்.
ஆனால், தற்போது நல்லாட்சியின் கீழ் எமக்கு நல்லதொரு நாட்டுத் தலைவர் கிடைத்துள்ளார். இது நாம் பெற்றுள்ள மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். நமது தற்போதைய ஜனாதிபதி சாதி,மத,குல பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
எனவே,ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து தூர விலகிச் சென்றுள்ள மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தி, அவர்களை ஜனாதிபதி தலைமையின் கீழ் எமது கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதே எமது பிரதான நோக்கமாகும்.
நாம் அனைவரும் இலங்கை வாழ் மக்கள். நாம் இந்நாட்டுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் எப்பொழுதும் நடந்து கொள்பவர்கள். யுத்தத்தின் பின்னர் உண்மையான வெற்றியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின்இ நாம் அனைவரும் தேசிய சிந்தனையூடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் மிக மோசமான கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
இதனை நாம் மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இது தொடர்பில் தெளிவான விளக்கங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ், ஊழல் மோசடிகளற்ற தலை சிறந்த உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதே ஸ்ரீ.ல.சு.க. யின் பிரதான இலக்காகும் என்றார்.
அமில பாலசூரிய
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடக செயலாளர்
