கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவசர கடிதம்..!

சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான (TSEP/2015) திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் நிதி இறுதி நேரத்தில் வேறு மாவட்ட பாடசாலைக்கு மாற்றம் - 

இது தொடர்பாக விசாரனைகள் மேற்கொண்டு அவசர நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை கல்வி அமைச்சர் தாண்டாயுதபாணிக்கு கோரிக்கை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுத பாணி அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

மத்திய உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் திருமலை வலயக் கல்வி வலயம், திருமலை தெற்கு கல்வி வலயம், மூதூர் கல்வி வலயம், கின்னியா கல்வி வலயம், மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு வடக்கு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம், பாண்டிருப்பு கல்வி வலயம், கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயம் , அக்கறைப்பற்று கல்வி வலயம், திருக்கோவில் கல்வி வலயம், அம்பாறை கல்வி வலயம், மகாஓயா கல்வி வலயம், தெஹியத்த கண்டி கல்வி வலயங்களில் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் திட்டம் 2015ம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு மேற்படி பிரதேசங்களில் கல்லூரிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பொத்துவில் அல் - இஸ்றக் வித்தியாலயம், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று முகம்மதியா ஜூனியர் கல்லூரி, அக்கரைப்பற்று ஜூனியர் கல்லூரிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடம் நிர்மாணிக்க ஒதுக்கப்பட்டிருந்த 06 மில்லியன் நிதி இடை நிறுத்தப்பட்டு வேறு மாவட்ட பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டிடக் குறைபாடுகள் நீண்ட காலமாக நிலவி வருகின்றது. மழை காலத்தில் இப்பாடசாலையில் அமைந்துள்ள 02 பழைய வகுப்பறைக் கட்டிடங்களில் நீர் வழிந்தோடி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு தடையாக இருந்து வருகிறது. 

இப்பிரதேச மக்களும், இப்பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் பல 
ஆண்டுகாலமாக இப் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடங்கள் தொடர்பாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். இவர்களின் நியாயமான வேண்டுகோளை ஏற்று, சென்ற 2014ம் ஆண்டில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு 05 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வகுப்பறைக் கட்டிடம் அமைக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் இப்பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடம் அமைக்க 06 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

மத்திய, உள்ளுராட்சி மாகாண அமைச்சினாலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சினாலும் இத் திட்டத்திற்கான சிபார்சும், அனுமதியும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளிலும் வகுப்பறைக் கட்டிடங்கள் அமைப்பதற்கான வேலை ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இப்பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் நிதியினை மாற்றி வேறு மாவட்ட பாடசாலைக்கு வழங்கியமை தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு இப் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 06 மில்லியனை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடாத்தப்பட்டாலும் இவ்வாறான அரசியல் பழிவாங்கள் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறித்து தங்களுக்கு மிக மன வேதனையுடன் அறியத்தருகின்றேன்.கல்வித் துறையில் நீண்டகால அனுபவங்களை பெற்ற தாங்கள் கல்வி அமைச்சராக பதவி ஏற்றவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். 

உங்களுக்கு கல்வி அமைச்சு கிடைப்பதற்கு எங்களின் பங்களிப்பு எப்படி அமைந்தது என்பதனை தாங்கள் அறிந்தவையே! கல்வியில் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாமல் கல்வி அமைச்சை வழி நடாத்துவீர்கள் என்ற நம்பிக்கையின் மத்தியில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சில நடவடிக்கைகளால் நல்லாட்சி என்ற பெயருக்கே கலங்கம் ஏற்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுக்கப்பட்ட இன உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகங்களுக்கிடையில் விரிசல்களும், சந்தேகங்களும் ஏற்படும் நிலமை உருவாகி வருகின்றது என்பதனை மிக மனவேதனையுடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

சென்ற 22/09/2015ம் திகதி நடை பெற்ற மாகாண சபை அமர்வின் போது ஆளும் கட்சியினால் குறைநிரப்பு நிதிக்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது நாங்கள் எல்லோரும் ஒன்றினைந்து ஆதரித்து வாக்களித்தோம் என்பதனை, தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

கடந்த மாகாண சபை ஆட்சிக்காலத்தில் விசேட திட்டங்களுக்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி மாவட்ட மட்டத்திலும், வலய மட்டத்திலும் வழங்கப்பட்டது. ஒரு போதும் இறுதி நேரத்தில் மாவட்ட மட்டத்திற்கும், வலய மட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியினை வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படவில்லை என்பதனை தெரிவிப்பதுடன், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு எல்லோரும் ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற இக் கால கட்டத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய நிதியினை வேறு மாவட்டத்திற்கு மாற்றியிருக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க விடயமாகும்.

எனவே, ஏற்கனவே திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருந்த இறுதிச் சந்தர்ப்பத்தில் இக் கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கான நிதி மாற்றப்பட்ட நிகழ்வு தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு மக்கள் பிரதி நிதி என்ற வகையில் இக் கோரிக்கையை தங்களிடம் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -