வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், கர்ப்பிணி பெண் ஒருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் சுயாட்சி பகுதியான காஸாமுனை பகுதியை 2007-ம் ஆண்டு முதல், ஹமாஸ் போராளிகள் குழு நிர்வகித்து வருகிறது. இந்த காஸா போராளிகள் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியில் இருதரப்பினரிடையே நடைபெற்ற தொடர்ச்சியான கடும் சண்டையில் 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு எதிர் தாக்குதல் நடத்தும் பொருட்டு, இஸ்ரேலின் தெற்கு பகுதிகளை குறித்து சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று காஸா மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். தெற்கு காஸாவின் ஜியுட்டன் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வீடுகள் பல தரைமட்டமானது. நூர் ஹசன்(30), என்ற கர்ப்பிணி பெண்ணும், ரஹாஃப் என்ற அவரது சிறு வயது குழந்தையும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் போராளிகளின் இரண்டு ஆயுத தயாரிப்பு கிடங்குகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






