புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் மேலும் ஒருமாத காலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
இதற்கான ஜனாதிபதியின் தடுப்புக்காவல் உத்தரவு அனுமதியை குற்றப்புலனாய்வுப் பொலிஸ்பிரிவினர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்திருந்தனர். வித்தியா படுகொலை சந்தேகநபர்களை விசாரிப்பதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த 30 நாள் காலஎல்லை இன்றுடன் முடிவடைந்ததை அடுத்தே இந்த காலஎல்லை நீடிப்பு கோரப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் கொழும்பில் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை ஊர்காவற்துறை நீதிமன்றம் கடந்த ஜூன் 15ஆம் திகதி வழங்கியிருந்தது.
வித்தியா படுகொலை மரணவிசாரணை வழக்கினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் லெனின்குமார், இதற்கான அனுமதியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேகநபர்களது இரத்தமாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சந்தேகநபர்கள் எவரும் வழக்கிற்காக ஆஜர்படுத்தப்படாமையினால் குறித்த அறிக்கை தொடர்பிலான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.