அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றி வந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பரிகாசம் செய்கிறார்.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மஹிந்த அணியின் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
பெல்வத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவரும் எம்பியுமான அநுர திஸாநாயக இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை கேட்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றி வந்தார். ஆனால் அப்பதவி மைத்திரிக்கு வழங்கப்படவில்லை.
இன்று பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கேட்டு மஹிந்த ராஜபக்ஷ – மைத்திரிபால சிறிசேனவை சுற்றி வருகிறார். இதனைத்தான் விதியின் விளையாட்டு என்பது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்று முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளதோடு மஹிந்த அணி மைத்திரி அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. குருநாகலில் இடம்பெற்ற மஹிந்த அணி கூட்டத்தில் 30 பேருக்கும் குறைவான எம்.பி. மாரே கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகார தோல்வி கண்டாலும் மஹிந்தவின் அணி தோல்வி காணவில்லை. அந்த அணிதான் இன்று ஆட்டம் போடுகிறது. எனவே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தினால் இந்த அணியின் ஆட்டம் அடங்கி விடும்.
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக கூறும் மஹிந்த அணியின் கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் பித்தாலாட்டம் ஆகும். ஏற்கனவே ஜோன் அமரதுங்க ரவிகருணாநாயகவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதாக கூறினார். அதெல்லாம் எங்கே போனது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.(ந)
