எதிர்க்கட்சி தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வழங்கப்படக்கூடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு நேற்று வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கட்சியும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சுதந்திர கட்சியை மாத்திரமல்லாது முழு பாராளுமன்றத்திறகே பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு மற்றொரு தரப்பும் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இது மாதிரியான கையொப்பங்களை பெறுவதினால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தீர்மானிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இதுவரை கையொப்பமிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டை ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டியது மிகவும் முக்கியமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள எதிர்க்கட்சி தலைமைத்துவம் யாரெனும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத பட்சத்தில் நாட்டில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
