நாட்டு மக்களை மறந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற ஒருவரை, விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்கும் கம்பஹா மக்களை நினைத்து வெட்கப்படுகின்றேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் தனது சிவப்பு சால்வையைக் கழற்றி விட்டு காற்சட்டை அணிந்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை ஆதரித்த கம்பஹா மாவட்ட மக்களை மறந்து விட்டு, அமெரிக்காவுக்கு ஓடிச் சென்ற பசில் ராஜபக்சவை அவர் 100 நாட்கள் கழிந்த பின்னர் திரும்பி வந்த போது விமான நிலையத்தில் மக்கள் வரவேற்றமையை நினைக்கும் போது வெட்கமாகவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்காக தேர்தலின் போது கடுமையாக உழைத்த ஒருவர் தான் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க. நூறு நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்க உழைத்த முக்கிய நபரும் இவர்தான்.
இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுமாயின் நான் அவருக்கு சார்பாகவே வாக்களிப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.
