காணி அபிவிருத்திமற்றும் காணிகள் மீட்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தொழிற்பாட்டுப் பணிப்பாளராக ((WD)) அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹனீபா மதனி அவர்களை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் நியமித்துள்ளார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, காணி அபிவிருத்தி மற்றும் காணிகள் மீட்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தவிசாளர்களும், பணிப்பார்களும், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்ட விஷேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள குதிரைப்பந்தைய விளையாட்டுத் திடலின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது ஹனீபா மதனிக்குரிய நியமனக் கடிதத்தை அமைச்சர் அவர்கள்வழங்கி வைத்தார்.
கட்டிட நிர்மாணத்துறையிலும், சிவில் சமூக அமைப்புக்களிலும் மிகத் தீவிர ஈடுபாடு கொண்ட ஹனீபா மதனி அவர்கள் இலங்கையின் பேராதனை, சவூதி அரேபியா மதீனா ஆகிய பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பட்டம் பெற்றவராவார்.
2009ஆம் ஆண்டு முதல் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்த பாரியசவால்களையும், வன்முறைகளையும் எதிர் கொண்டவர்களில் முதன்மையானவராக இனங்காணப்பட்ட இவர் தற்போது அக்கரைபற்று மாநாகரசபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளராகவும், உச்சபீட உறுப்பினராகவும் இருந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
2009ஆம் ஆண்டு புனித நோன்பு காலத்தில் வெள்ளை வேனில் வந்த சிலர் இவரை, அக்கரைப்பற்றிலுள்ள இவரது வர்த்தக நிலையத்திலிருந்து கடத்திச் சென்றனர். இப்பிரதேச அரசியல் வாதிகளின் மிக மோசமான இந்த நடவடிக்கையே இவரை இன்றுவரை அரசியலில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்து வந்திருக்கிறது.

.jpg)
.jpg)