ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அரசியல் வாதிகள் தங்களது தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல், 'ஐயோ, ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தோற்றுப் போகவில்லை. முழு சிங்கள இனமும் தோற்றுப்போய் விட்டது!' என்று கோஷிக்கின்றார்கள். சிறுபான்மை இனங்கள் வென்றுவிட்டன.
பெரும்பான்மைச் சிங்கள இனம் தோற்றுவிட்டது என்பதுதான் அதன் பொருள் எனக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த செய்தியை விடுப்பதனூடாக ஒற்றுமைப்பட்டுள்ள முழு நாட்டு மக்களையும் மீண்டும் இனவாதத்தை நோக்கி பின்தள்ளுவதற்கு எத்தனிக்கப்படுகின்றது என்றார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ஹக்கீம் யட்டிநுவரை தேர்தல் தொகுதியில் தொளுவ மேற்குக் கிராமத்தில் புதிய சனசமூக நிலையத்தின் இரண்டு மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறினார்.
யட்டிநுவர பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பா கொடித்துவக்குவின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சனசமூக நிலையக் கட்டிடத்தை சர்வதேச மகளிர் தினமான மார்ச் மாதம் 08ஆம் திகதி அமைச்சர் ஹக்கீம் கோலாகலமாக திறந்து வைத்தார்.
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
புதிய யுகமொன்றில் நாம் காலடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த மைத்திரி யுகம் பற்றி மக்கள் மத்தியிலுள்ள எதிர்பார்ப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதை நாம் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.அதேவேளையில், எங்களுக்கும், புதிய அரசாங்கத்திற்கும் எதிரான விமர்சனங்களுக்கும் குறைவில்லை.
ஆயினும், நூறு நாட்களுக்குள் பலவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தும் கூட, அவற்றில் சாதித்தவற்றைப் பொறுத்தவரை குறைபாடுகள் இருக்கலாம்.எனக்கு இப்பொழுது மிகவும் பலம் வாய்ந்த ஓர் அமைச்சுப் பொறுப்பு கிடைத்துள்ளது. முன்னர் பிரபல அமைச்சர் ஒருவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் கையாண்ட முக்கியமான அமைச்சுப் பொறுப்பை நான் ஏற்றிருக்கின்றேன். அந்த அமைச்சினூடாக வழங்கக்கூடிய அனைத்து சேவைகளையும் மக்களுக்குச் செய்வதற்கு நான் தயாராகயிருக்கிறேன்.
கண்டி மாவட்டத்தில் இந்த யட்டிநுவர தொகுதியில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினை உட்பட ஏனைய குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு நான் தீர்மானித்திருக்கிறேன். இந்த யட்டிநுவர தொகுதியில் பெரும்பாலும் சிங்கள மக்களே வசிக்கின்ற போதிலும், முஸ்லிம், தமிழ் மக்களுடனும் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். முன்னர் இது கடுகண்ணாவை தொகுதியாக இருந்த காலத்தில் எனது ஊரான கலகெதரயில் அதன்கீழ் இருந்தது. அப்பொழுது சிங்கள மரிக்கார் என்று அழைக்கப்பட்ட ஸீ.ஏ.எஸ்.மரிக்கார் என்ற அமைச்சர் சிங்கள மக்களினதும் பேராதரவை பெற்றிருந்தார். அவரது நடை, உடை, பாவனை கூட சிங்கள பாரம்பரியத்திற்கு ஏற்புடையதாகவே காணப்பட்டது. அவரை பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரதம் ஆதரவுடன் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைந்திருந்தால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் மயந்த திசாநாயக்க கூறினார். நாங்கள் எல்லோரும் பழிவாங்கப்பட்டிருப்போம்.
இப்பொழுது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அரசியல் வாதிகள் தங்களது தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல் எவற்றையெல்லாமோ உளறுகிறார்கள் அவர்கள் புதிய ஒரு கோஷத்தை எழுப்பத் தொடங்கிருக்கிறார்கள்.
அவர்களது எழுப்பியள்ள கோஷத்தின் பாரதூரத்தைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. 'ஐயோ, ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தோற்றுப் போகவில்லை. முழு சிங்கள இனமும் தோற்றுப்போய் விட்டது!' என்று கோஷிக்கின்றார்கள். அதிலிருந்து என்ன வெளிப்படுகிறது? அதன் விளக்கமென்ன? சிறுபான்மை இனங்கள் வென்றுவிட்டன. பெரும்பான்மை சிங்கள இனம் தோற்றுவிட்டது என்பதுதான் அதன் பொருள்.
இந்த இனவாதச் செய்தியை விடுப்பதனூடாக ஒற்றுமைப்பட்டுள்ள முழு நாட்டு மக்களையும் மீண்டும் பின்நோக்கித் தள்ளுவதற்கு எத்தனிக்கப்படுகின்றது.
இதனை மனதில் இருத்தி, இந்த அரசாங்கம் ஓர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல. இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களை அரவணைத்து ஆட்சி செய்ய வல்லது என்பதை செயலில் காட்டவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.
முன்னைய அரசாங்கத்தை விட அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அரசாங்கமாகும் என்பதை விஷேடமாக சிறுபான்மை மக்களின் தலைவர் என்ற முறையில் நிரூபிப்பது எங்களது கடமையாகும் என்றார்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினரும், யட்டிநுவர தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான மயந்த திசாநாயக்க, யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா கொடித்துவக்கு, தும்பனை பிரதேச சபை உறுப்பினர் அம்ஜாத் முத்தலிப், பன்வில பிரதேச சபை உறுப்பினர் இத்ரீஸ், பாத்ததும்பர பிரதேச சபை உறுப்பினர் ரியாஜ், யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் நிலந்த சம்பிக்க அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)