ஏஎம் றிகாஸ்-
தேசிய கலைத் திட்டம், இணை பாடவிதான செயற்பாடுகள், சமூக எழுச்சி சார்ந்த செயல் நெறிகள் மற்றும் தொழில் நுட்பத்தை உள்வாங்கும் இயலுமையை விருத்தி செய்தல் ஊடாக தரமான கல்வி வழங்கும் மையங்களாக பாடசாலைகளை இயங்கச் செய்வது தனது நிருவாகத்தின் நோக்கமென மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளர் முகம்மது இப்றாஹிம் சேகு அலி தெரிவித்துள்ளார்.
இவர் 25.03.2015 காலை 9.30 மணிக்கு ஏறாவூரிலுள்ள வலயக் கல்விப் பணிமனையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதி, உதவி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் துறைசார் இணைப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
கல்வி நிருவாக சேவை தரம் - 11 ஐச் சேர்ந்த வியாபார நிருவாக துறையின் சிறப்புப் பட்டதாரியான முகம்மது இப்றாஹிம் சேகு அலி, கடந்த காலத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், திருகோணமலை - மூதூர் புனித அன்ரனீஸ் மகா வித்தியாலத்தில் ஆரம்பக் கல்வியையும், மட்டக்களப்பு - ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசலையில் உயர் கல்வியையும் கற்றுள்ளார்.
இவர் ஸ்ரீஜயவர்தனபுர, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக் கழகங்களில் கற்றுத் தேர்ந்துள்ளார்.
நிருவாகத் திறமையும் சிறந்த ஆளுமையையும் தன்னகத்து கொண்டுள்ளவராக சமூக ஆர்வலர்களினால் கருதப்படும் இவர், இன மற்றும் பிரதேச வேறுபாடுகளின்றி பணியாற்றும் சிறப்பான அனுபவமிக்கவரென தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)