பி.முஹாஜிரீன்-
நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவியேற்று முதற் தடவையாக அம்பாறை மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தையொட்டி பாலமுனையில் மாபெரும் வரவேற்பு நிகழ்வும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயலக காரியாலயத் திறப்பு விழாவும் இன்று சனிக்கிழமை (31) மாலை நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் எற்பாட்டில் பாலமுனை அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொது மக்களால் தக்பீர் கோஷங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதுடன் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயலக காரியாலயத்தின் பெயர்ப் பலகை அமைச்சரினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு புதிய யுகத்தில் புதிய ஆட்சியில் இணைந்திருக்கின்ற நாம் இவ் நல்லாட்சிக்கு வித்திட்டவர்கள் என்ற மகிழ்ச்சியில் எமது ஆதரவாளர்களால் விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள காரியாலயத்தின் மூலம் அம்பாறை மாவட்ட மக்களினது தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பாக கருதி இதனை செயற்படுத்துவோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனைப் போராளிகளை கட்சியும் தலைமையும் எப்போதுமே நன்றியுணர்வுடன்தான் பார்க்கிறது. இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த மத்திய குழு உள்ளிட்ட அனைத்து ஆதரவாளர்கள் தொண்டர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல். ஜெமீல், கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர், பிரதி மேயர் முழக்கம் ஏ. அப்துல் மஜீத் உட்பட அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)