கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில்; அவர் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வின் போது ஆளும் முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் மீது எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸ் தாக்கியதை கேள்வியுற்று அதிர்ச்சியும், கவலையும் அடைகின்றேன். இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கல்முனை மாநகர சபை இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியின் மையமாகும். இச்சபையின் கௌரவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான காடைத்தனமான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது.
நான் முதல்வாராக இருந்த காலப்பகுதியில் உறுப்பினர் றியாஸ் சபையினை குழப்புவதற்காக இவ்வாறான காடைத்தனங்களை மேற்கொள்ள பலமுறை முயற்சித்த போது அதனை தையரியமாக முன்னின்று தடுத்து நிறுத்தியுள்ளேன். இதன் மூலம் உறுப்பினர்களினதும், சபையினதும் கௌரவத்தினை பாதுகாத்துள்ளேன் என்பதை இங்கு சுற்றிக்காட்ட விரும்புகின்றேன்.
மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் பிரேரணைகளின் போது வாதப்பிரதி வாதங்கள் இடம் பெறுவது வழமையானவை. இதனை தனது வாதத் திறமையால் முறியடிக்காமல், தனது காடைத்தனத்தின் மூலம் தான் கொண்டு வந்த பிரேரணையினை நிறைவேற்ற முற்பட்டுள்ளார். இவரின் இவ்வாறான காடைத்தன அரசியல் கலாச்சாரத்தினை கல்முனை மக்கள் இனிமேலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கான தீர்ப்பை எமது மக்கள் எதிர்காலத்தில் இவருக்கு வழங்குவார்கள் என நம்புகின்றேன்.
மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் நேர்மையானவர். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இத்தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் மிக விரைவில் குணமடையப் பிரார்த்திக்கின்றேன்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர் றியாஸினை உடன் கைது செய்யுமாறு கல்முனை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மலேசியா சென்றுள்ள கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினதும், செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலியினதும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment