அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்தப் பயனும் இல்லை என்பதாலேயே நான் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொண்டேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை தெரிவித்தார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ள இராஜதுரை எம்.பி. வீரகேசரி இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நான் 2010 ஆம் ஆண்டு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் போட்டியிட்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் ஒவ்வொரு தோட்ட தொழிலாளிக்கும் காணி உரிமை பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச்சஸ் காணியும் அங்கு தனியான வீடு அமைத்து கொடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை தூரநோக்கு என்ற அடிப்படையிலும் இந்த கருத்து கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று 10 வருடங்களாக மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டின் ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும் கூட இதுவரையும் எந்த தோட்டத்திலும் தோட்ட தொழிலாளிக்கு காணி உரிமை பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படவில்லை.
அத்தோடு தனி வீடு என்கிற கருத்து இன்றும் கனவாகவே இருக்கின்றது. வரவு செலவு திட்டத்திலும் தோட்ட தொழிலாளிகள் தொடர்பாக முறையான முன்மொழிகள் இடம்பெறவில்லை.
இதனால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை என்பதாலேயே நான் ஜக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டேன்.
ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவி எனக்கு கிடைத்துள்ளது. அத்தோடு நான் தோட்ட தொழிலாளிகள் தொடர்பாக கூறிய கோரிக்கைகளுக்கு ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்கியதாலேயே நான் ஜக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment