குருநகர் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா என்ற யுவதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ் வழக்கு விசாரணையில் யுவதியின் தாய் தந்தையர்கள் மன்றில் ஆஜராகி தமது சாட்சியங்களை அளித்திருந்தனர். அதனை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 13ம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போன குறித்த யுவதி புத்தாண்டு தினமான மறுநாள் பெரிய கோவிலுக்கு அருகில் உள்ள பொது கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் என யுவதியின் பெற்றோரால் யாழ் ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களிடமும் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
பொலிஸ் விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டுக்களை இருவரும் முற்றாக மறுத்திருந்தனர்.
இந் நிலையில் யுவதியின் பெற்றோர்களினால் இன்றைய தினம் நீதிமன்றில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின் போதும் கூட தமது மகளின் தற்கொலைக்கு குறித்த இரு பாதிரிமார்களும் தான் காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

0 comments :
Post a Comment