2012ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் யாழ்ப்பாண கல்வி வலையத்தில் 67.7 சதவீதமான மாணவர்கள் சித்தியினை பெற்றுள்ளனர் என யாழ் வலையக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாண கல்வி வலையத்தை சேர்ந்த பாடசாலைகளில் கடந்த ஆண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள்,கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்றவர்கள், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 3ஏ பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ். வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சையில் எமது வலையத்தில் 67.7 சதவீத மாணவர்கள் சித்தியெய்தினர். அத்துடன் 59 மாணவர்கள் 9ஏ சித்தியினைப் பெற்றதுடன் 57 மாணவர்கள் 8ஏ , பி சித்தியினையும் பெற்றுள்ளனர்.
மிகப்பெரிய எண்ணிக்கையான மாணவர்கள் சித்தியெய்தமையினால் யாழ்.கல்வி வலையம் முன்னணியில் உள்ளதுடன் எமக்கு பெருமையும் தேடித்தந்துள்ளனர்.
அத்துடன் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையானது தேசிய ரீதியில் 10ஆவது இடத்தினைப் பெற்றுள்ளதுடன் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதேபோல கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையிலே 68 மாணவர்கள் 3ஏ சித்தியினைப் பெற்றிருப்பதுடன் முதல்4 இடங்களையும் யாழ். கல்வி வலையமே பெற்றுள்ளது.
எனவே ஒவ்வொரு பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் முன்னெடுத்த செயற்பாட்டினால் இந்த வெற்றியை நாங்கள் பெற முடிந்தது என்றார்.

0 comments :
Post a Comment