(எம்.பைஷல் இஸ்மாயில்)அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குச் சொந்தமான முல்லைத்தீவு மீலாத் நகர் சனசமூக நிலையக் கட்டிடம் மற்றும் சிறுவர் பூங்கா என்பன மிக நீண்டகாலமாக கவனிப்பாரற்று காட்சியளிக்கின்றன.
இக்கட்டடம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இன்று 2013.06.10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் தவிசாளர் நேரடியாக அவ்விடத்திற்கு விஜயம் செய்து கட்டிடம் மற்றும் சிறுவர் பூங்கா என்பவற்றை பார்வையிட்டார்.
இதன்போது மீலாத் நகர் அல்-ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதேச சபையின் பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் மற்றும் மீலாத் நகர் பள்ளிவாசல் தலைவர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
சனசமூக நிலையக் கட்டடம் மிக நீண்ட காலமாக யாருமே கவனிப்பாரற்று இருப்பதனால் இங்கு இரவு வேளைகளில் கால்நடைகள் தங்கும் இடமாகவும் இன்றைய இளைஞர்கள் மதுபான வகைகளை பாவிக்கும் இடமாகவும் பாவித்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் உடனடியாக இக்கட்டடத்தை திருத்தியமைத்து தருவதோடு இக்கட்டடத்தை எனது பார்வையின் கீழ் வைத்துக்கொள்வதாகவும் அதிபர் றியாஸ் தவிசாளரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் இங்கு அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் மழை காலங்களில் சுமார் 2 அடி வெள்ளநீர் நிற்பதனால் அதற்காக 50 லோடு மணலையும் போட்டு இந்த சிறுவர் பூங்காவை புணரமைத்து தருவதுடன் முன்னால் உள்ள வீதியின் மின் கம்பத்தில் வெளிச்சம் தரக் கூடியவகையில் தெரு மின் விளக்கு ஒன்றும் பொறுத்தித்தருமாரும் வேண்டினார்.
மீலாத் நகர் அதிபர் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தவிசாளர் இக்கட்டடம் மற்றும் சிறுவர் பூங்காவை புணரமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் அதன் முதற்கட்டமாக நாளை மறுதினம் சிரமதானமூலம் இந்த இடத்தினை துப்புரவு செய்து வீதியின் தெருவிளக்கையும் அன்றைய தினம் பொருத்தித்தர ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் சிந்தனைக்கமைவாக இக்கட்டிடம் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அவரினாலேயே 1997.07.18 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டிடம் மற்றும் சிறுவர் பூங்கா புணரமைக்கப்படுவதன் மூலம் மீலாத் நகர் மக்களுக்கும், பிரதேச சபையின் கலாச்சார நிகழ்வுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.


0 comments :
Post a Comment