
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வாசிக்காதவர்களும் அதை விளங்கிக்கொள்ள முடியாதவர்களும்தான் 13ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றனர்' என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
'1988ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இப்போது 25 வருடங்களின் பின் இந்த திருத்தம் தொடர்பில் மக்களுக்கு வேறு தெரிவேனும் இருக்கவில்லை என எப்படி அவர்கள் கூற முடியும்' எனவும் அமைச்சர் ராஜித்த கேள்வி எழுப்பினார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் உணர்ச்சி மேலிட்ட நிலையில் நடைபெற்றது. இதன்போது விமல் வீரவன்சவை ராஜித்த சேனாரத்ன அமைச்சர், காரசாரமாக தாக்கிக்கொண்டிருந்த வேளையில் விமல் வீரவன்ச, ராஜித்த சேனாரத்னவை 'ப்றா' குழுவின் அங்கத்தவர் என குறிப்பிட்டார். ('ப்றா' என்பது ஜே.வி.பி.க்கு எதிராக இயங்கிய ஓர் இரகசிய குழுவாகும்)
'தெற்குக்கு நல்லதாக உள்ள மாகாணசபை, வடக்குக்கு கூடாதது என்பதன் பின்னால் என்ன நியாயம் உள்ளது' என அமைச்சர் சேனாரத்ன கேட்டார்.
மாகாணசபையூடாக அதிகாதரப் பகிர்வை ஆதரித்தவர்களை துரோகிகள் என கூறியவர்கள் அதிலிருந்து சகல நன்மைகளையும் அநுபவித்து வருகின்றனர். அவர்கள் சம்பளம், வாகனங்கள் என்பவற்றை தாம் மட்டுமன்றி தமது மனைவிமாரும் அநுபவிக்க வழி செய்துள்ளனர்.
ஆனால், மாகாணசபைகள் கூடாதவை என அவர்கள் கூறுகின்றனர். இப்போது மாகாண சபைகள் தமக்கு நல்லது எனவும் தமிழர்களுக்கு அது கூடாதெனவும் அவர்கள் கூறுகின்றனர். இப்போது, 13ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்கள் அபிப்பிராயம் திரும்பியுள்ளது' என அமைச்சர் குறிப்பிட்டார்.
'எப்போதும் கூச்சலும் எதிர்ப்பும் இருக்கும் தமிழ் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கிய போது இப்படித்தான் எதிர்ப்பு இருந்தது. தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவதை ஏற்றுக்கொள்ள எமது மக்களுக்கு 40 வருடங்கள் எடுத்தன.
ஊடகங்களும் இந்த கூச்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எப்போதும் கூச்சல் இருக்கும். நாம் பொறுத்திருந்து பார்ப்போம்' என்று ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment