கிழக்கு மாகாணத்தின் முக்கியமான சுகாதார மையங்களில் ஒன்றாக விளங்கும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை, தனது புதிய வைத்திய அத்தியட்சகரை வரவேற்றுள்ளது. அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ நியமனத்தின் அடிப்படையில் இன்று (10) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்பு நிகழ்வு மிக எளிமையானதாய் இருந்தபோதிலும், அது ஒரு சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹாரீஸ் அவர்களிடமிருந்து வைத்திய கலாநிதி றிபாஸ் தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட வைத்திய கலாநிதி றிபாஸ், முன்பு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவமிக்க சுகாதார நிர்வாகியாகத் திகழ்கிறார். அவரின் அனுபவமும், நிர்வாகத் திறனும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சேவைகள் மேம்பாட்டிற்கு புதிய ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இவ்வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகராக நீண்டகாலம் சிறப்பாகப் பணியாற்றிய ஏ.எல்.எம்.எப். ரஹ்மான் அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து, இந்த நியமனம் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. அவரது பணி நினைவுகூரப்பட்டதோடு, புதிய அத்தியட்சகருக்கு சகலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பொறுப்பேற்பு நிகழ்வில், வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய பரிபாலகர்கள், கணக்காளர், நிருவாக மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதானிகள், சிவில் அமைப்பினரும் கலந்து கொண்டு, புதிய வைத்திய அத்தியட்சகருக்கு அன்பான வரவேற்பை அளித்தனர்.
இந்த நியமனம் மூலம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் மேலும் வலுவடைந்து, மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.

0 comments :
Post a Comment