கிழக்கு மாகாண சபையின் PSDG திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தின் திறப்பு விழா திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சி.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, காணி நிர்வாகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பி. தனேஸ்வரன் விசேட அதிதியாகவும்
கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு வழங்கிவரும் தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள், கூட்டுறவின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு வழங்கிய மகத்தான சேவைகளுக்காக அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி விஷேடமாக கௌரவிக்கப்பட்டார்.
மேலும், தேசிய வளர்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் விவசாயம், கைத்தொழில் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல், கூட்டுறவு துறையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பலநோக்கு மற்றும் முன்னனி கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், முகாமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.


0 comments :
Post a Comment