தமிழர் முஸ்லிம் என்ற இனவேறுபாடின்றி இரு தேசிய இனங்களின் நலன் சார்ந்த அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை இயங்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்புப் பிரதிநிதி ரீ. வசந்தராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியிலே தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன, எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் பலரும் வந்து இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (17.01.2017) மேலும் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு அணி சேர்ந்து கொள்வதற்கு பலர் விரும்புகின்றார்கள்.
ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈபிஆர்எல்எப் கட்சி அதேபோன்று சித்தார்த்தனை தலைமையாகக் கொண்ட புளொட் கட்சியும் தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்திருக்கின்றார்கள்.
மேலும், கஜேந்திரகுமாரை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் அரசியல் கட்சியும் எம்மோடு இணைந்துள்ளது.
தற்போதைக்கு இந்த நான்கு சாராராகிய நாம் ஒரே அணியில் இணைந்து செயற்பட்டு வருவதன் ஒரே நோக்கம் வடக்கும் கிழக்கும் இணைந்ததான சமஷ்டி ரீதியிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்வினூடாக தமிழ் பேசும் சமூகங்கள் இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.
'எழுக தமிழ்' நிகழ்வு மக்களின் பேராதரவோடு வடக்கிலே இடம்பெற்று விட்டது. அதேபோல கிழக்கிலே ஜனவரி 21 ஆம் திகதி எழுக தமிழை மக்கள் பேராதரவுடன் நடத்தி பிரகடனத்தைச் செய்யவிருக்கின்றோம்.
கிழக்கிலே தேசிய இனங்களாக வாழ்கின்ற தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் பிரிந்து நிற்பதைவிட இணைந்து வாழ்வதுதான் காலப் பொருத்தமும் சாலப் பொருத்தமாகவும் உள்ளதென்பது அனுபவ வாயிலான, வெளிப்படையான உண்மையாகும்.
ஆகவே இந்த இரு தேசிய இனங்களும் தமிழ் பேசும் சமூகம் என்ற ரீதியில் இணைந்து கிழக்கிலே இருந்து பிரகடனம் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஜனவரி 21 ஆம் திகதி மட்டக்களப்பிலே இடம்பெறுகின்ற எழுக தமிழ் பேரணியை எதிர்பார்த்து செயற்பட்டு வருகின்றோம்.
அரசியல் கட்சி வேறுபாடுகளோ தமிழர் முஸ்லிம் என்ற இன மத வேறுபாடுகளோ இன்றி இந்நிகழ்வுகளில் எவரும் பங்குபற்றலாம் என்றும் அவர் அழைப்பு விடுக்கின்றோம்.' என்றார்.