எஸ்.அஷ்ரப்கான்-
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த ஓருவரை நியமிக்க வேண்டும் என கல்முனை அபிவிருத்தி போரத்தின் தலைவர் ஏ.பி.எம் அஸ்ஹர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும் போது,
இலங்கையில் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் நல்லிணக்க செயற்பாட்டு பொறிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான
அம்பாறை மாவட்ட செயலணியின் பொது மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று
14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் கலாநிதி எஸ்.அனுசியா தலைமையிலான குழு முன்னிலையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு பட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை பாராட்டத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமாகும்.மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழும் அம்பாரை மாவட்டத்தில் மொழி அமுலாக்கல் கொள்கை சரியாகப்பின்பற்றப்படுவதில்லை..குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் தற்போது 20 பிரதேச செயலகங்கள் உள்ளன.அதில் 13 பிரதேச செயகங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் உள்ளன .இதன் த்லைமைக்காரியாலயமான அரசாங்க அதிபர் அலுவலகம் அம்பாரையில் உள்ளது.இதனால் கரையோரப்பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அத்துடன்.இன்று நாட்டில் போதுமான அளவு சிங்கள அரசாங்க அதிபர்கள் உள்ளனர்.
இதே போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணிசமானளவு தமிழ் சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிபர்களும் உள்ளனர்.ஆனால் முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபர் இல்லை.அம்பாரை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான கரையோர மாவட்டம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் வரை அரசாங்கம் தனது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு உடனடியாக அம்பாரை மாவட்டத்திற்கு முஸ்லிம் அரசாங்க அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் அதற்கு இவ்வாணைக்குழு சிபார்சு செய்ய வேண்டும் எனவும் அத்துடன் இம்மாவட்டத்தில் அரச கருமங்கள் தமிழ் மொழியில் நடை பெறுவதை உறுதிப்ப்டுத்த வேண்டும் கொழும்பு மற்றும் அம்பாரை யிலிருந்து வரும் பெரும்பாலான தொடர்பாடல்கள் சிங்கள மொழியிலேயே வருகின்றன இதனால் இம்மொழி தெரியாத பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே இம்மாவட்டத்தில் தமிழ் மொழியிலும் அரச கருமங்கள் ஆற்றப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.