இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று இன்றிருக்கும் பலமான அரசியல் சக்தியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதினூடாக, முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் அணுகுமுறை பல தரப்பினராலும் மிகப்பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டை ஆண்டவர்கள் தொடக்கம் ஆயுதம் ஏந்தியவர்கள் வரை இம்முயற்சிகளை நீண்டகாலமாகச் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பலவீனப்படுத்துவதினூடாகதான் தமது நலன்களை இலகுவாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர் எனக் கூறினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஜர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம்.
முஸ்லிம் நாடுகளில் படைகளை களத்தில் இறக்கி அழிவுகளை செய்த மேற்கத்தைய ஆக்கிரப்பாளர்கள், தமக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிளம்பிய மோசமான விமர்சனங்களுக்கு, தந்திரோபாய ரீதியிலான அணுகுமுறையைக் கைப்பற்றி வருகின்றனர்.
உள்ளுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மிக்க கவனமாக கணிப்பிட்டு, சுன்னிக்கள் என்றும் சியாக்கள் என்றும் பிளவுகளைத் தூண்டி, தனக்கு விசுவாசமான தரப்பினருக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து, தாம் களத்திற்குச் செல்லாமலே தனது நலன்களை நிலைநிறுத்தும் அந்த அணுகுமுறை, அவர்களுக்கு அதிக இழப்புகளற்ற லாபகரமான பயன்களை பெற்றுக் கொடுத்துள்ளது.
சிரியாவில், ஈராக்கில், ஆப்கானில், எகிப்தில், லிபியாவில், ஏமனில் இன்று நடந்து கொண்டிருக்கும் யுத்தம் யாருக்கு எதிராக யார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
நான் கூறுவதின் அர்த்தம் உங்களுக்கு நன்றாக விளங்கும். முஸ்லிம்களின் தலைவர்களான கடாபி, சதாம், முர்சி போன்றோரை இல்லாமல் செய்து அல்லது அகற்றி எண்ணெய் வளத்தைச் சுரண்டும் அதேநேரம் தமது செல்லப்பிள்ளையான இஸ்ரேலைக் காப்பாற்றிக் கொண்டு, அரபு முஸ்லிம் உலகை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படித்தான், இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று இன்றிருக்கும் பலமான அரசியல் சக்தியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதினூடாக, முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் அணுகுமுறை பல தரப்பினராலும் மிகப்பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டை ஆண்டவர்கள் தொடக்கம் ஆயுதம் ஏந்தியவர்கள் வரை இம்முயற்சிகளை நீண்டகாலமாகச் செய்து வருகின்றனர். அவ்வாறு பலவீனப்படுத்துவதினூடாகதான் தமது நலன்களை இலகுவாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர்.
இந்நோக்கத்தை அடைந்துகொள்ள அவர்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக மேற்கொள்ளும் பிரச்சார யுக்திகளை உணரத் தலைப்படாமல், இணையத்தள செய்திகளிலும், முகநூல் பதிவுகளிலும், டுவீட்டர் தகவல்களிலும், வட்ஸப் பகிர்வுகளிலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை இளைய தலைமுறை வேதவாக்கியங்களாக எடுத்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் துரதிஸ்டமே.
அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வரை நகர முற்படும் இக்காலகட்டத்தில், முஸ்லிம்களின் பலமான இயக்கமான முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். தெற்கிலுள்ள அரசியல் நிலவரத்தையும் வடக்கிலுள்ள எதிர்பார்ப்புக்களையும் குழப்பிக் கொள்ளாமல், நிதானமான அணுகுமுறையினூடாக முஸ்லிம் சமூகம் தனது அபிலாசைகளை முன்கொண்டு செல்ல வேண்டுமென்ற முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் முதிர்ச்சியை,முஸ்லிம் காங்கிரஸ் பற்றி விமர்சனங்களை முன்வைப்போர் புரிந்துகொள்ள வேண்டும்.
கத்திக் கலவரம் உண்டாக்கி முஸ்லிம்களை இரட்டைப் பெரும்பான்மையின் எதிரிகளாக்கிக் கொள்ளாமலும், சாத்தியமற்ற விடயங்களில் அதிகம் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும், நிதானமாக நகர்ந்து செல்ல முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறை உணரத் தலைப்பட வேண்டுமெனவும் அவர் அங்கு மேலும் கூறினார்.
