போலியான முகநூலின் மூலம் பலரை அச்சுறுத்தி வந்த நபர் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நபரை, கைது செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தாலோ அல்லது வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வரும் போதோ கைது செய்யபப்டவேண்டும் என்று, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு, நீதவான் பணித்துள்ளார். பெண் என்று குறிப்பிட்டு போலியான முகநூலைக்கொண்டு பல பணக்காரர்களுடன் நண்பர்களாகி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து பணம் பறித்து வந்த நபரை கைது செய்வதற்கே உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாறி மாறி இருந்துகொண்டு குறித்த முகநூலை இயக்கி வருகின்றமை தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த 17ஆம் திகதி நாட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த லக்மால் குரே என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
