ஐ.ஏ. காதிர் கான்,மினுவாங்கொடை நிருபர்-
கொழும்பு வாழ் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் எந்தவித அவசியத் தேவைகளையும் நிறைவேற்ற கொழும்பு மாநகர சபை தவறியுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார்.
மொறட்டுவை – மோதர, சலால் வீதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இப் பிரதேசத்தின் மலம் வெளியேற்றும் தாங்கியின் குழாயின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக, அப் பிரதேசத்திலுள்ள இரு வீடுகளில் வசிக்கும் மூன்று குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் அமைச்சருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அமைச்சர் இப்பிரதேசத்தைப் பார்வையிடச் சென்றார்.
இதனால் பாதிப்புக்குள்ளான மக்களையும் சந்தித்து, அவர்களின் தேவைகளையும் அமைச்சர் அறிந்து கொண்டார். இந்தத் தாங்கியில் ஏற்பட்டுள்ள கசிவு தொடர்பில் மாநகர சபை இதுவரை எந்தவித ஒழுங்குகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், இது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும், இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் முஸ்தபா தனது அவதானத்தைச் செலுத்தியதுடன், இந்த விடயம் தொடர்பாக அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளைப் பணித்தார். குறிப்பாக, பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு துரிதமாக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறும், கொழும்பு மாநகர சபையின் ஆணையாளரை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இவர்களை மாற்று வீடுகளில் குடியமர்த்துவதற்கான ஒழுங்குகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறும், அமைச்சர் அவரிடம் பணிப்புரை விடுத்தார். இது சம்பந்தமாக தான் உரிய நடவடிக்கைகளை எடுத்து, மாநகர சபை ஊடாக மாதாந்தம் கூலியாக பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில், ஒரு வருடத்திற்கு இவர்களுக்கான வீடு வழங்கப்படும் என்றும், ஆணையாளர் இதன்போது அமைச்சரிடம் ஒப்புதல் வழங்கினார்.
கொழும்பு வடக்கில் உள்ள மலம் வெளியேற்றும் குழாய்,1993 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாகவே கழிவு நீர் கடலில் போய்ச் சேருகின்றமை குறுப்பிடத்தக்கது.
அமில பாலசூரிய,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடக செயலாளர்.


