எம்.வை.அமீர்-
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’, ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’; ‘ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ என்பன வெறும் மொழிகள் இல்லை. பொன் மொழிகள.; மனித வரலாற்றில் வழி வழி வந்த மாறாத மணிமொழிகள். இவ்வாறான மணிமொழிகளின் மூலம் ஆசிரியப்பணியின் மகோன்னத தன்மையை நாம் அறியக்கூடியதாகவுள்ளது.
சர்வதேச ரீதியாக பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றவேளை ஆசிரியர்களையும் மதித்து அவர்களுக்கான ஓர் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பகம் வெளியிட்டு ஆசிரியர்களின் கௌரவம், மேன்மை, உயர்வு, மாண்பு போன்றவைகளை எடுத்தியம்புவதற்காக வருடந்தோறும் ஒக்டோபர் 6ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி முதற் தடவையாக இலங்கையில் கொண்டாடப்பட்டது.
சமுதாயத்தின் ஆலவிருட்சமாய் இருந்து பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் ஊடாக மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற இப்பெருந்தகைகளின் சேவைதனை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
அன்றைய நாள் ஒவ்வொரு ஆசிரியனுக்குமான பிறந்த தினமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் பாடசாலைகளில் ஆசிரியரானவர் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் எதிர்காலத்துக்குகந்த புத்திசாதுர்யமான நற்பிரஜைகளையும் தோற்றுவிக்கின்ற பலப்பரீட்சையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தான் ஒரு உருகும் மெழுகு வர்த்தியாக தன்னையே உருக்கி பிறரின் நலனுக்காய் ஒளிர்ந்திடும் நிலையில் சதா மாணவர்களின் எழுச்சிக்கு வித்திடும் ஆசிரியர்களின் நலனிலும் நம் சமூகம் அக்கறை கொள்ள வேண்டும்.
சமூகத்தின் ஏணிகளாகவும் தோணிகளாகவும் இருந்து வழியேற்பட பாலங்களாய் அமைந்துள்ள ஆசிரியர்களது பல்வேறு பிரச்சினைகளும் ஆராயப்பட வேண்டிய நாள்.
‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு’ என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவர் மனதில் நன்கு பதியவைத்து அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.
கிரேக்க வரலாற்றில் இடம்பெற்ற ஆசிரியர் சாக்ரடீஸ். அவர் மாணவர் பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டோட்டில், இவர்களை உலகம் இன்னும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகின்ற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும் அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினக் கொண்டாட்;டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும். மனிதனை மனிதனாக உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்களை சொல்வதுண்டு.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும் செயலளவு மரியாதைக்கும் உரித்துடையவர்களே.
மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை நாம் கௌரவப்படுத்துவோம்.
உலகில் நிகழும்இ நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது எமது வாதம். உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருக்கிறான் என்பதே யதார்த்தமாகும்.
ஒரு சமூகம் அதிஉன்னத நிலை அடைந்து இருந்தால் நிட்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவி;ல்லை என அர்த்தம். வேறு எந்த துறையைவிடவும் அதிக பொறுப்புகளும் அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.
ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில் வெறும் மண்கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும்.
மகத்துவம் மிக்க ஆசிரியர் சேவையைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் இப்படியும் கூறியுள்ளார்கள்.‘கல்வி கற்பதைக் கடமையாகக் கொள்வார் இறப்பதில்லை. ‘கற்றறிந்தோரின் சொற்களைக் கேட்டலும் அறிவியல் அறிவை மற்றவர்களுக்கு புகட்டலும் சமயச்சடங்குகளைவிட உயர்ந்தவை’ என்று கூறியுள்ளார்கள். கற்றலும் கற்பித்தலும் எவ்வளவு புனிதமானது என்பதை இக்கூற்று உணர்த்தி நிற்கிறது.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடுஇ நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல. மாறாக உயிரூட்டுபவர்கள். சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஆனால் ஆசிரியர்கள் இதற்கெல்லாம் தகுதியுடையவர்களாக நடந்து கொள்கிறார்களா? அன்றைய கால ஆசிரியர்களைப் போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்றைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்களா? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தியாகம், தொண்டு இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதில்;தவறில்லையே!
ஆசிரியப்பணி என்பது ஊதியத்துக்காக மட்டுமே செய்யப்படும் தொழில் அல்ல. தொண்டு என்பதை மறந்து விடக்கூடாது. இந்த நாட்டின் இளைய தலைமுறை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உடல் வளர்ச்சியோடு உள வளர்ச்சியும் சேர வேண்டும். கல்வியும் அறிவும் அவர்களை பக்குவப்படுத்த வேண்டும்.
ஒரு சிறந்த ஆசிரியன் தனது மாணவனின் உயர்ச்சியில் மகிழ்ச்சி காண்பான். அவனது புன்முறுவலில் தனது இதழ் அசைப்பான். அவனது கவலைகளில் தனது உள்ளம் உருகுவான். அவனது முயற்சிக்கு இவன் கைகொடுப்பான். தனது மாணவர்களுக்காக விடியலாக நினைத்து கண்விழிப்பான்.
ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும் பிள்ளைகள் வெள்ளைக் காகிதங்கள். அதில் எதனை நாம் விதைக்கின்றோமோ அதனையே அவர்களிடமிருந்து அறுவடை செய்யப்போகின்றோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதில் நாம் எமக்கு பயன்தராத விதைகளை தூவி விடுவோமானால் களைகளைளே நாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிறந்த ஆசிரியன் எவ்வாறான தன்மைகளை தன்னில் கொண்டிருக்க வேண்டும் என்ற விடயத்தினைTeacher என்ற ஆங்கிலப்பதமானது எமக்கு உணர்த்தி நிற்பதனை நாம் காணலாம்.
T – Training – பயிற்சி
W – Education – கல்வி
A – Ability – திறமை
C – Creativity – படைப்புத்திறன்
H – Humanism – மனிதம்
E – Efficiency – வினைத்திறன்
R – Reformer – சீர்திருத்தவாதி
ஆகவே சீர்திருத்தவாதிகளான நாம் எமது பிள்ளைகளாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை கருதுவோம். அவர்களுக்கு தமது பெறுமதியினை உணரச் செய்வோம். நாளைய உலகின் தலையெழுத்துக்களை தீர்மானிப்பவர்கள் நீங்கள்தான் என்பதை உணரச் செய்வோம். அதற்காக அவர்களை தயார் செய்வோம். இதுவரை தொடர்ந்த இதற்கான எமது தியாகங்கள் மேலும் தொடரும் என்ற உறுதியினை இன்றைய ஆசிரியர் தின நற்செய்தியாக உலகிற்களிப்போம். அதற்காக நாளும் நாம் பாடுபடுவோம்.