அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற ஏற்பாடாகியுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள முஸ்லிம்கள் அந்த சந்திப்பை புறக்கணிக்க முன்வரவேண்டும் என மேல் மாகண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமாகிய பைரூஸ் ஹாஜியார் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...
மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சியில் பள்ளி உடைப்புகள் கலவரங்கள் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் எவற்றையும் கண்டிக்கவில்லை சாதாரண முஸ்லிம் குடிமகனின் குரலை மட்டுமல்லாமல் அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் அமைச்சர்களின் குரல்களைக் கூட அவர் செவிமடுக்கவில்லை.
முன்பு பொதுபல சேனா பற்றி வாய் திறக்காத மஹிந்த இப்போது அவ்வமைப்பு வெளிநாட்டு சதி என்கிறார். இப்போது பொதுபல சேனா வெளிநாட்டு சதி என கூறுபவர் அன்று அவர்களின் அட்டகாசங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எம்மை பற்றி சிந்திக்காதவர் இன்று செல்லாக்காசாக ஆகியுள்ள நிலையில் முஸ்லிம்களின் நலனுக்காக எதை சிறைக்கப்போகிறார்.
தற்போது அரசியலுக்குள் மறுபிரவேசம் செய்ய மாற்று வழிகளை தேடித்திரியும் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இலங்கை வராலாற்றில் முஸ்லிம்கள் எண்ணிலடங்கா துயரங்களை சந்தித்து என்றால் அது மஹிந்த ஆட்சியில் தான் என்பதை நாம் யாரும் மறந்துவிடமுடியாது.
மஹிந்த ராஜபக்ஷ போன்ற இரட்டை முகம் கொண்ட ஒருவரை முஸ்லிம்கள் போய் சந்திப்பது இந்த சமூகத்துக்கே செய்யும் துரோகமாகும் இந்த சந்திப்பை புறக்கணிக்க உடனடியாக முன்வருமாறு முஸ்லிம்கள் சார்பாக தான் அழைப்பு விடுப்பதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். றி
