பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, இவர்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
(பர்மா) மியன்மார் தெற்குப் பகுதியில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வரும் ரோகின்ய இன முஸ்லிம்களை அந்நாட்டு அரசாங்கம் தன் சொந்தப் பிரஜைகளாக ஏற்க மறுத்துள்ளதோடு அவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் ஆரம்பித்துள்ளது.
இதனால் அவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளை நோக்கி கடல் பகுதியினூடாக இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். தம் உடமைகளை இழந்து செல்லும் இம்மக்கள் பாரிய உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.
உலகில் மனித உரிமைகள் சம்பந்தமாக ஓங்கிக் குரலெழுப்பும் இக்கால கட்டத்தில் இந்த மக்களின் அவலம் பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே. மியன்மார் அரசின் இந்த மோசமான செயற்பாட்டினை நாம் அனைவரும் கண்டிக்க முன்வருவதோடு இவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
