ஏஎம் றிகாஸ்-
அரசாங்க பொதுப்பரீட்சைகளில் தோற்றவுள்ள வறிய மாணவர்களின் நலன்கருதி கடந்த பத்து வருடகால வினா - விடை தொகுப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட உசாத்துணை நூல்களை பாடசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆசிய நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதுதொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் நடைபெற்றது.
கல்வித்துறை சார் சேவையில் ஆறு தசாப்த காலத்தை கடந்துள்ள ஆசிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் - அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்ஐ சேகு அலி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது ஏறாவூர், கோரளைப் பற்று மேற்கு மற்றும் காத்தான்குடி ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த உயர்தர வகுப்புக்களை உள்ளடக்கிய 25 பாடசாலைகளுக்கு சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்தநிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி கடந்த பத்து வருடகால வினா – விடை தொகுப்பு, ஆங்கில மொழி கதைப் புத்தகங்கள் மற்றும் இதர நூல்களை உள்ளடக்கி நாற்பது புத்தகங்கள் கொண்ட பொதி ஒவ்வொரு பாடசாலைக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
ஆசிய நிறுவனத்தின் புத்தக பிரிவு பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி, பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்ரீஎம் அஷ்ரப், ஏறாவூர் - நகர சபைத் தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
கற்றல் நடவடிக்கையில் நகர புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களை கிராமப்புற மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமென ஆசிய நிறுவனத்தின அதிகாரியொருவர் தெரிவித்தார்.