முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில் அவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தினுள் அமைந்துள்ள வீட்டில் தங்குவதற்கான வசதிகளை செய்து தருமாறு நிமல் லன்சா என்பவரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைய பசில் ராஜபக்சவே காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய சிலர் குற்றம் சுமத்தினர்.
இச்சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்சவும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதனாலே சந்திப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பசில் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாக்குமூலம் வழங்குவதற்கே அவர் எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய எதிர்வரும் 22ம் திகதி பசில் ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்ததும், தனது பாராளுமன்ற நடவடிக்கைக்காக பாராளுமன்றம் செல்லவிருப்பதாகவும், அவர் அன்று 19வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் மிக நெருங்கிய தொடர்புள்ளவர்களையும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க தூண்டுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி தனது சகோதரர்கள் மீது கொண்ட ஆதரவின் நிமித்தம் அவர்களுக்கு அரசியலில் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
ஆனால் அவர் தோல்வியடைந்த பின்னர் அவரின் சகோதரர்கள் இருவரும் தங்களின் சுயலாபம் கருதி அவரை காலைவாரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
