கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை வென்றது போன்று வருகின்ற தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பொன்றில் தெரிய வந்துள்ளதாக இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் விமல் டி. கமகே தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தமது கட்சியின் நிலைப்பாடு பற்றியும் ஜனாதிபதி வெற்றி பெற வேண்டியதன் அவசியம் பற்றியும் ஊடகம் வாயிலாக மக்களை தெளிவுபடுத்தும் முகமாக நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இதுவரையில் எமது கட்சி உறுப்பினர்கள் வீடுவீடாக சென்று மக்களுக்கு தெளிவூட்டியுள்ளனர். அதன்போது மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றிலேயே இவ்வாறு தெரிய வந்துள்ளது.
மேலும், சந்திரிகா, ரணில், மைத்திரி ஆகியோர் கறுப்பு பணத்திற்காக தேர்தலில் களமிறங்கியுள்ளனர். யுத்தத்தை வெற்றி கண்ட கரும் சிங்கமான ஜனாதிபதி பொது வேட்பாளரையும் வெற்றி கொள்வார் என்று நம்புவதோடு இனி எஞ்சியுள்ள காலப்பகுதியிலும் 50 ஆயிரம் வீடுகளுக்குச் சென்று தேர்தல் பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தவுள்ளோம். அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ 4ஆவது முறை போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவளிப்போம்.
தென்னை மரத்தின் சகல பாகங்களிலும் பயனுள்ளது. அதனை நாம் மதிப்பதில்லை. மாறாக பயனற்ற அரச மரத்திற்கே தெய்வத்தின் இருப்பிடம் என நீர் ஊற்றி அபிஷேகம் செய்வது போலதான் மஹிந்தவை விடுத்து மைத்திரிக்கு வாக்களிப்பது.
இதுவரை எந்த பொது வேட்பாளரும் நாட்டின் ஐக்கியத்தை பற்றி பேசியதில்லை. காரணம் அவர்கள் பிரிவினைவாதிகள் என்ற உண்மையை மக்கள் அறிந்ததால்தான் 25 முறைக்கும் அதிகமாக ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் நிராகரித்துள்ளனர். மீண்டும் அவரை பிரதமராக அமர்த்த முனைவது அரசியல் ரீதியிலான சதித்திட்டம். இதனை வென்று ஜனாதிபதி இன்னும் 20 வருட காலம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே தாம் விரும்புவதாக அவர் தமது உரையின்போது கூறினார்.
0 comments :
Post a Comment