இஸ்ரேலிய பகுதிக்குள் ஊடுருவ சுரங்கப் பாதை ஊடாக வந்த ஹமாஸ் இயக்க போராளிகள், இஸ்ரேலிய ராணுவ சீருடை அணிந்திருந்தனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இரு அணிகளாக ஹமாஸ் போராளிகள் காசாவில் இருந்து சுரங்கப்பாதை ஒன்றின் ஊடாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது.
இரு அணிகளும், வெவ்வேறு நேரத்தில் சுரங்கப்பாதை ஊடாக வந்ததாக சொல்கிறது இஸ்ரேலிய ராணுவம்.
இந்த சுரங்கப்பாதை காசாவில் இருந்து, இஸ்ரேலின் நெகெவ் நகர்வரை அமைக்கப்பட்டு இருந்தது எனவும், நெகவ் நகருக்குள் இந்த இரு அணிகளும் ஊடுருவி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நகருக்குள் இவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள்.
ஒரு அணியினர், எர்னெஸ் பகுதிக்கும், நிர் என்ற இடத்துக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாவது அணியினர், இஸ்ரேலிய ராணுவ வாகனம் ஒன்றின்மீது ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டபோது, எதிர்த் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அந்த தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக தெரிகிறது. ஆனால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.
இப்போது இந்த சுரங்கப்பாதை முடியும் இடத்தை கண்டுபிடித்துவிட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர், சுரங்கப் பாதையை முற்றாக அழித்து விட்டனர்.
ஹமாஸ் தரப்பில், இரு அணிகளாக வந்த 10 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்குள் அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க, இஸ்ரேலிய ராணுவ சீருடை அணிந்திருந்தனர் என தெரியவருகிறது.

0 comments :
Post a Comment