6 ஆவது தடவை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்?



ஆர்.சனத்-
6 ஆவது தடவை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்!
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐ.தே.க. புதிய சாதனை
இரண்டாக உடைகிறது சஜித் அணி! வெளியேறினார் ஹரின்
அரசியலில் ரணில் கடந்து வந்த பாதை (1970-2022)

னது அரசியல் வாழ்வில் தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றி, சவால்களை முறியடித்து சோதனையைக்கூட சாதனையாக மாற்றியமைக்கும் அரசியல் த(ம)ந்திரம் கற்றுவைத்துள்ள - ரணில் விக்கிரமசிங்க, 6 தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியிடப்படும்.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி, இரு நாட்கள் கடக்கவுள்ள நிலையிலும், புதிய பிரதமரின்கீழ் ஆட்சி அமையவில்லை. இந்நிலைமை நீடித்தால் இலங்கை பொருளாதாரம் மேலும் வங்குரோத்தடையும். அதேபோல இராணுவ பிரசன்னமும் அதிகரிக்கப்பட்டால் சர்வதேச உதவிகள் தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
 
பிரதமர் பதவியை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்பதற்கு, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனை சஜித் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டது. ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 19 ஐ மீள செயற்படுத்தும் நிபந்தனையுடன் - நாட்டு நிலையைக் கருதி, பதவியை ஏற்பதற்கு ரணில் சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை. ஏற்கனவே பதிவிட்டது. தற்போது மீள்பதிவு செய்யப்படுகின்றது.
பிறப்பு - 1949 மார்ச் 24.
தந்தை - எஸ்மண்ட் விக்கிரமசிங்க.
தாய் - மாலினி விக்கிரமசிங்க.
மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்.
ஆரம்பக்கல்வி - கொழும்பு ரோயல் கல்லூரி.
உயர்கல்வி - கொழும்பு பல்கலைக்கழகம், சட்டத்துறை.
ஐ.தே.கவின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியல் பயணம் ஆரம்பம். 1970 இல் களனி தொகுதி அமைப்பாளராக நியமனம். அதன்பின்னர் பியகம தொகுதி கையளிப்பு.
1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டி. 22 ,045 வாக்குகளைப்பெற்று வெற்றிநடை.
28 ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமனம்.
1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ஒப்படைப்பு.
1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிப்பு. 9 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.
1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பு.
1994 இல் ஐ.தே.க. தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமனம். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் ரணில் செயற்பட்டார்.
1995 - திருமண வாழ்வில் இணைவு. களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியையான மைத்திரி விக்கிரமசிங்கவை கரம்பிடித்தார்.
1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டி. சந்திரிகாவே வெற்றிபெற்றார். ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன.
2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி. ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.
2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்
2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின்கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது. தேர்தலில் தோல்வி. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.
2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றிபெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது.
2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது.
2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.
2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சிமூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். எனினும், நீதிமன்றத்தைநாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.
2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
எனினும், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் வாய்ப்பு உதயமானது.
2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.
2020 பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனியாக போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடு முழுவதும் 2.15% வாக்குகளே கிடைக்கப்பெற்றன.
தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு கிடைத்தது.
நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். 2020 இல் தோல்வியை தழுவினார். எனினும், தேசியப்பட்டில் ஊடாக சபைக்கு நாடாளுமன்றம் வந்தார்.
அரசியலில் குள்ளநரியாகவே அவர் பார்க்கப்படுகின்றார். 42 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப்பிடித்ததுடன், அரசமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவேதான் தற்போது ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகின்றார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக பிளவு படும் என தெரியவருகின்றது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சுயாதீனமாக செயற்படும் முடிவை அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :