வடக்கு முஸ்லிம் மக்களை துரிதமாக தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுமாறு கோரி முல்லைத்தீவில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம், குமாரபுரம், முறிப்பு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸலிம்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது '25 வருட அகதி வதழ்க்கை போதும் ளெகரவமாக மீள்குடியேற விடுங்கள்', 'அரசியல் இலாபத்திற்காக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தாதே', ' நல்லாட்சி அரசே, எங்களை சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ விடு', 'தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே மீள்குடியேற்றத்தின் அடிப்படை', 'மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினையை கையாள ஆணைக்குழு வேண்டும்', 'பூர்வீகமாக குடியிருந்த காணியிலாவது குடியேற விடுங்கள்' உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்hட்டக்காரர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தாம் பல கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்ததாகவும், எனினும் காணி, வீடு இல்லாமையினால் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாமல் இருப்பதாகவும் கவனயீர்ப்பில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கடந்த அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதாக பல தடவைகள் வாக்குறுதியளித்துள்ள போதிலும் இன்றுவரைக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை துரிதமாக மீள்குடியேற்றத்தை செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நல்லுறவோடு வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி விரிசல்களை உண்டாக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி அரசியல்வாதிகள் சிலர் பகிரங்கமாக செயற்படுவதுடன், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள்.
ஆர்.ரஸ்மின்