UKயில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5G அலைவரிசை காரணமென்று பரவிய வதந்தியால், அங்கு சுமார் 20 கையடக்க தொலைபேசி கோபுரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. UKயில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சேவையை தொடங்கியுள்ளன. அதே சமயத்தில், 5G அலைவரிசை, கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் அதிகரிப்பதாக UKயில் வதந்திகள் கிளம்பியதையடுத்து, கையடக்க தொலைபேசி கோபுரங்களை பொதுமக்கள் தேடித்தேடி அழித்து வருகிறார்கள்.
குறிப்பாக, லிவர்பூல் ( Liverpool , வெஸ்ட் மிட்லேண்ட் ( west midlands) மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் சுமார் 20 கையடக்க தொலைபேசி கோபுரங்கள் தீவைத்தும், சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டுள்ளன.
ஆனால், வேடிக்கையான விடயமென்னவென்றால், 5G அலைவரிசை UKயில் மெதுவாக அமுலாக்கப்பட்டு வருவதால், எரிக்கப்பட்ட பெரும்பாலான தொலைத்தொடர்பு கோபுரங்களில் அந்த தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. எனவே, 3G, 4G தொலைபேசி கோபுரங்களே எரிக்கப்பட்டுள்ளன.
மேலும், தொலைத்தொடர்பு நிறுவன பொறியியலாளர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் தாக்கியும் வருகிறார்கள். இதுபோன்ற 30 சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. அதை படம் பிடித்தும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
அதனால்,O2 என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தங்கள் ஊழியர்கள் செல்லும் வாகனங்களில், “முக்கிய வேலை , தாக்குதல் நடத்தாதீர்கள்” என்ற அடையாளத்தை பொருத்தியுள்ளது. UKயின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடங்கிய Mobile U.K. என்ற குழுமம், இவ்வாறான தாக்குதலை தடுக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இவ்வாறான தாக்குதல் நடப்பதை கண்டால், தகவல் தெரிவிக்குமாறும், கொரோனா வைரஸூடன் 5G அலைவரிசையை தொடர்புபடுத்துவதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் பத்திரிகைகளில் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.