பலஸ்தீனத்தை யூத அரசாங்கம் மற்றும் அரபு அரசாங்கம் என இரண்டாக பிரிக்க 1947ம் ஆண்டில் ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948ம் ஆண்டு இஸ்ரேல் என்ற தனிநாடு உருவானது. அப்போதே பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே யுத்தம் வெடித்தது. 1967ம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின் போது பலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பலஸ்தீன எழுச்சி உருவானது.
பல வருடத்துக்கு பிறகு 2014ல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை கசப்புடன் முறிந்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்நிலையில் இஸ்ரேல், பலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக மத்திய கிழக்கு அமைதி திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டார். கிழக்கு ஜெருசலேத்தில் புதிய தலைநகருத்துடன் கூடிய பலஸ்தீன அரசாங்கம் உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் ஜெருசலேம் இஸ்ரேலுக்கே சொந்தம் என அமெரிக்கா கூறுகிறது.
பலஸ்தீன சுதந்திர அரசாங்கத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேற்குக்கரை குடியேற்றம் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ அருகிலிருக்க இந்த அமைதி திட்டத்தை அறிவித்த அமெரிக்கா ஜனாதிபதி "இதுதான் பலஸ்த்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு” என்றும் கூறினார்.
ஆனால் அமெரிக்காவின் அமைதி திட்டம் இஸ்ரேலுக்கே சாதகமானதென்றும், அது ஒரு சதித்திட்டமென கூறி பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அமைதி திட்டத்துக்கு எதிராக பலஸ்தீனத்தில் தற்போது போராட்டம் வெடித்துள்ளது.