ஜனாதிபதியின் நற்பெயரை ஆளுநர் காப்பாற்றவேண்டும்!
இன்றேல் கிழக்கு கொந்தளிக்கும் என்கிறார் கோடீஸ்வரன் எம்.பி.
ஜனாதிபதியின் பிரதிநிதி என்பதால்தான் ஆளுநருக்கு மதிப்புக்கொடுக்கின்றோம். ஆனால் அந்த ஆளுநர் ஏழைகளின் வயிற்றிலடிக்கும்வண்ணம் மனிதாபிமனமற்றரீதியில் நீதிக்குப்புறம்பாக நடந்துகொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. கிழக்கில் நடப்பது நல்லாட்சியா காட்டாட்சியா?
இவ்வாறு காரைதீவில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுவரும் காரைதீவு பிரதேசசபை அமையஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கேள்வியெழுப்பினார்.
காரைதீவு பிரதேசசபை நுழைவாயிலை மறித்து கடந்த இருநாட்களாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுவரும் ஊழியர்களைச்சந்தித்த கோடீஸ்வரன் எம்.பி. அவர்களோடு சில நிமிடங்கள் இருந்து கலந்துரையாடினார்.பின்னர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்:
ஆட்சேர்ப்பு நடைமுறைக்குமுரணாக அரசியலுக்காக ஆளுநர் இந்தப்புதிய நியமனத்தை பின்வழியால் செய்துள்ளார். இதனால் பலஆண்டுகாலமாக இதைநம்பி ஜீவனோபாயம் நடாத்திவரும் அமைய ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.மறுபக்கம்
உள்ளுராட்சிசபைகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
ஏழைகளின் தோழன் விவசாயிகளின் நண்பன் நல்லாட்சியின் தந்தை என்றெல்லாம் போற்றப்படும் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் ஆளுநர் இந்த நியமனத்தைத் திணித்திருக்கிறார். இது கிழக்கில் உள்ளூராட்சிசபைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குச்செய்யும் துரோகம். இது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டது. அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார். நிர்க்கதியான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்விடயத்தை இன்னும் ஜனாதிபதி அறியவில்லையா? உடனடியாக தலையிட்டு ஏழைத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றவேண்டும்.நான் நாளை கொழும்புசெல்கிறேன்.அங்கு இதுவிடயத்தை எமது தலைவர் சம்பந்தர் ஜயாவிடம்கூறி பிரதமமந்திரி மற்றும் ஜனாதிபதியிடம் கூறி உரியதீர்வைப்பெற்றுத்தர ஆவன செய்வேன்.
கிழக்கிலுள்ள உள்ளுராட்சிசபைத்தலைவர்களை அழைத்துக்கொண்டு ஜனாதிபதியைச்சந்திக்க ஏற்பாடு செய்யதயாராகவுள்ளேன். மறுபுறம் கிழக்கிலுள்ள சபைகளிலுள்ள அமையஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரியபோராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.தொழிங்சங்கங்களும் ஆதரவுதர தயாராகவுள்ளன. கிழக்கு கொந்தளிக்கின்றநிலை ஏற்படுவதை ஆளநர் தவிர்க்கவேண்டும்.
ஆளுநர் உடனடியாக புதிய நியமனங்களை நிறுத்தவேண்டும். நிறுத்துவார் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி இதில் தலையிட்டு சிறந்த தீர்வைத்தருவார் என்றும் நம்புகின்றோம். என்றார்.
அச்சந்தர்ப்பத்தில் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கருத்துரைக்கையில்:
இது எமது 12 அமைய ஊழியர்க்கும் அழைக்கப்பட்ட அநீதி. இவர்களுக்க நிரந்தரநியமனத்தை வழங்கிவிட்டு புதியவர்களை நியமியுங்கள். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. நான் இன்று ஆளுநரை திருமலைசென்றுசந்திக்கச்சென்றேன். அவர் மட்டக்களப்பிற்கு வந்துவிட்டதாகச்சொன்னார்கள். நான் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து அவரைச்சந்தித்து முறைப்பாட்டைக்கையளித்து பேசினேன். தான் கவனிப்பதாகச்சொன்னார். மொத்தத்தில் சபைச்செயற்பாடுகள் முடங்கியுள்ளன. உடனடியாகதீர்வு காணாவிடின் பிரதேசம் நாறும். மக்கள் கொந்தளிப்பார்கள். என்றார்.