உலக வாழ் தமிழ் சொந்தங்கள் மற்றும் அனைத்து மக்களினதும் வாழ்வு செழித்து தழைப்பதற்கு இத் தைத் திருநாள் வழியமைக்கட்டும் என மலையக தேசிய முன்னணியின் தலைவரும், கூட்டு எதிர்க்கட்சியின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளருமான கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் பொங்கல் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தைத் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய பகவானுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழர் இல்லங்களில் கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாள் அனைவர் உள்ளங்களிலும் சுபீட்சத்தையும், அமைதியையும் உருவாக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அபரிமிதமான பங்களிப்பினை வழங்கி வரும் எங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மீது திணிக்கப்பட்டுள்ள சுமைகள் நீங்கி, அவர் தம் வாழ்வு ஒளிர்ந்து மிளிர இந்த தைத் திருநாள் வழியமைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை வழிபாடு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கொண்டாடப்படும் இந்த அற்புதமான தமிழர் பண்டிகை மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் விடிவிற்கான ஆரம்பமாக அமையும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மலையக வாழ் பெருந்தோட்ட தோழர்கள் சுயாதீனமாக சிந்தித்து தீர்மானங்களை எடுத்து தங்களின் வாழ்க்கையை செலுமையடையச் செய்ய இந்த தை பிறப்பு, தீர்மானம் மிக்கதோர் திருப்பு முனையாக அமையட்டும் எனவும், இனியொரு விதிசெய்ய இந்த மலர்ந்துள்ள தைத் திருநாள் வழி செய்யட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காழ்ப்புணர்ச்சி, குரோத உணர்வுகள் நீங்கி இதயங்களில் இன்பம் நிறைந்திடும் இனிய தைப்பொங்கலாக, இந்த பொங்கல் திருநாள் மலரட்டும் என கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தனது தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
