
க.கிஷாந்தன்-
மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றறோம். அன்று செய்த தவறை போல் இன்று செய்யாமல் சிந்திக்க வேண்டும். மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாதுஎன இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு இ.தொ.கா வின் “சேவல்” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 17.01.2018 அன்று மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
75 வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் மக்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்துக் கொடுத்தது.
இது, நெருப்பு சுடும் என்று இ.தொ.கா கூறியதும், சுட்டாலும் பரவாயில்லை என்று கூறி மக்கள் நெருப்பை தொட்டு இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
நான் அமைச்சராக இருந்த நேரத்தில் உரிய முறையில் வீடுகளை அமைத்து கொடுத்தேன். ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறுகின்றதா ? இல்லை. முறையற்ற ரீதியில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
நமது முன்னோர்கள் உருவாக்கிய தேயிலை மலைகளை நமக்கு பிரித்து கொடுத்தால் என்ன? எம்மால் பராமரிக்க முடியும். தேயிலை காணிகள் பிரிக்கப்படுகின்றது. நமது மரக்கறி தோட்டங்கள் தோட்ட அதிகாரிகளால் அபகறிக்கப்படுகின்றது. தற்போது இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.
இந்த நாட்டில் நாம் மானத்துடனும், மரியாதையுடனும் வாழ வேண்டும் என்றால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

