முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச முழுமையாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னா் செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டு ஓய்வு பெற்றுக்கொள்ள எடுத்த தீர்மானத்தில் மாற்றமில்லை என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பசில் ராஜபக்ச அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டதனைத் தொடர்ந்து அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முயற்சி எடுத்த போதிலும் அதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஓரம் கட்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், உப வேந்தர்கள், சட்டத்தரணிகள், முன்னாள் அமைச்சு செயலாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த போது தாம் அரசியலை விட்டு விலகிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியான தொடர்புகள் இல்லாத போதிலும் அரசியல்வாதிகளுடனான நட்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
