விடுதலைப் புலிகளைவிட பயங்கரமான கொலைகார அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பில் இலங்கையில் பாதுகாப்பு படையினரும் உளவுத் துறையினரும் உஷார்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் அதன் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நந்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சிங்கள, பௌத்த மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் வழங்கி சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கவே நாம் போராடி வருகின்றோம். முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
இன்று இலங்கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உறுப்பினராகவிருந்து சிரியாவில் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இனிமேலாவது எமது நாட்டுக்குள் தலைதூக்கியுள்ள முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக எமது முப்படையினரும் உளவுத் துறையினரும் உஷார்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு செய்துள்ளோம். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க கால அவகாசம் கோரியுள்ளோம் என்றும் நந்த தேரர் தெரிவித்தார்.
