வவுனியா மாவட்டத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை 27-07-2015 திங்கள் காலை 10:30 மணியளவில் வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பலநோக்கு மண்டபத்தில், கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்விசேட சந்திப்பில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் கலந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது அமைச்சர் தனது உரையில்,
தாம் தமது மாகாணத்தில் இவாறு உள்ள மக்களுக்கு ஓர் நிரந்தர வருமானம் தரக்கூடிய வாழ்வாதாரத்தை உருவாக்கிகொடுக்கும் நோக்கோடு இத்திட்டத்தை தாம் செய்ய எண்ணியே கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் 43 மில்லியன் நிதியை ஒதுக்கி வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும், இவ்வாறான வட மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தலா ஐம்பதுனாயிரம் ரூபா 50,000/= வீதம் வழங்கவுள்ளதாகவும், ஏற்க்கனவே மூன்று தடவைகள் பதிவதற்கான கால நீடிப்பு வழங்கியும் இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும் இவ்வாறான அரசியல் கைதிகளின் குடும்பங்கள் விரைவாக தமது பதிவுகளை தங்கள் பகுதி மாதர்/கிராம அபிவிருத்தி சங்கங்கள் மூலமாகவோ அல்லது கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாகவோ அல்லது எனது அமைச்சின் செயலாளர் அலுவலகம் ஊடாகவோ விரைவாக பதிவு செய்து இத்திட்டத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததோடு. அடுத்த கட்டமாக இத்திட்டத்தின் கீழ் வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்தவர்களின் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான செயற்றிட்டம் எதிர்வரும் மாதம் முதல் நடைமுறைப் படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு விசேட விதமாக அரசியல் கைதிகள் தொடர்பில் எமது மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் உள்ள கணிசமான அரசியல் கைதிகளின் குடும்பங்களையும் இத்திட்டத்தில் விசேடமாக உள்வாங்கவுள்ளதாகவும், அவ்வாறு வேறு மாகாணத்தை சேர்ந்தவர்களும் எதிர்வரும் புதன் 29-07-2015 காலை 10:00 மணிக்கு தனது மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் வருகைதந்து தமது பதிவுகளை மேற்கொண்டு இவ் விசேட உதவி திட்டத்தினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


